எயார் பிரான்ஸ்- ஹாப் நிறுவனத்திலுள்ள 7,580பேரை ஆட்குறைப்பு செய்ய திட்டம்!
எயார் பிரான்ஸ் விமான நிறுவனம் மற்றும் அதன் பிராந்திய பிரிவான ஹாப் நிறுவனத்தில் பணிபுரியும் 7,580பேரை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக, எயார் பிரான்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடியே இதற்கு காரணம் என தெரிவித்துள்ள நிர்வாகம், 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்துள்ளது.
எயார் பிரான்ஸின் ஊழியர்களில் 16 சதவீதம் மற்றும் ஹாப் நிறுவனத்தில் 40 சதவீதமானோர் ஆட்குறைப்புக்கு உள்ளாகின்றனர்.
மேலாளர்கள் மற்றும் பணியாளர் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்புகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, எயார் பிரான்ஸில் 41,000 பேரின் 6,560 இடங்களையும், ஹாப் இல் 2,420 இடங்களில் 1,020 பதவிகளையும் அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எயார் பிரான்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மூன்று மாதங்களாக, எயார் பிரான்ஸின் செயற்பாடு மற்றும் turn over 95 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. நெருக்கடியின் உச்சத்தில், நிறுவனம் ஒரு நாளைக்கு 15 மில்லியன் யூரோக்களை இழந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.