Main Menu

உலகக் கோப்பையை கைப்பற்றப் போவது யார்? – நியூசிலாந்துடன் இங்கிலாந்து நாளை மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

உலகக் கோப்பை.லண்டன்:
2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் கடந்த மே மாதம் 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன.
லீக் சுற்றின் முடிவில் இந்தியா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. 

புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி, நான்காவது இடத்தில் இருந்த நியூசிலாந்தை முதல் அரையிறுதி போட்டியில் ஏதிர் கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.


இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து 49-வது  ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 32.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 226 ரன்களை அடித்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
இங்கிலாந்தை பொருத்தவரை தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜோனி பேர்ஸ்டோவ் அதிரடியான ஆட்டத்தின் மூலம் எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்து வருகின்றனர்.

கேப்டன் மோர்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித் போன்றவர்கள் எதிரணி வீரர்களின் விக்கெட்டுகளை சரியான சமயத்தில் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுக்கின்றனர். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 


நியூசிலாந்தை பொருத்தவரை அந்த அணியின் தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிகோல்ஸ் இதுவரை தங்களது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிபடுத்தவே இல்லை. ஒருவேளை இறுதி போட்டியில் இரு வீரர்களும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர்களை கட்டுப்படுத்துவது இயலாத காரியம்.

நியூசிலாந்து அணி கேப்டன் உலகக்கோப்பை தொடர் முழுவதும் அணியை தலைமை தாங்கி வழிநடத்துவதிலும், பேட்டிங்கிலும்  சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக ராஸ் டெய்லர் மற்றும் ஜேம்ஸ் நீஷம் போன்ற வீரர்கள் தங்கள் பங்கினை நேர்த்தியாக செய்து வருகிறார்கள். பந்து வீச்சில் அந்த அணியின் பேர்குசன், டிரெண்ட் போல்ட் மற்றும் மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

மோர்கன்- வில்லியம்சன்

சமபலம் வாய்ந்த இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் மோதுவதால் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றும் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

   
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இங்கிலாந்து: ஜேசன் ராய், பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட். 
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், பெர்குசன், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட்.

பகிரவும்...