Main Menu

இலங்கை உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து ஐ நா பொதுச் செயலாளர் கருத்து!

இலங்கை, நியூஸிலாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது பயங்கரவாத அச்சுறுத்தலின் சர்வதேச ரீதியிலான துயரமான நினைவூட்டல்களாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு பயணத் திட்டத்தை நிவ்யோர்க்கில் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு பல்வேறு அடிப்படைக் காரணங்களுக்கு அமையவே பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் நிறுவப்பட்டது.

சர்வதேச பயங்கரவாத ஒத்துழைப்பை வலுப்படுத்தல், தகவல்களைப் பரிமாறும் வலையமைப்புகளை அடையாளம் காணல் மற்றும் பயங்கரவாதத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட உறுப்பு நாடுகள், அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டிருக்கின்றனவா என்ற காரணங்களின் அடிப்படையில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பு, அதற்கு அப்பாற்பட்ட பங்காளர்களுடனும் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டுவதாகவும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு நெதர்லாந்து அரசாங்கம் வழங்கும் பங்களிப்பை அவர் இதன்போது பாராட்டியுள்ளார்.

அத்துடன், இந்தியா, ஜப்பான், சவுதி அரேபியா மற்றும் கட்டார் முதலான நாடுகள், ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்புக்கும் பொதுச் செயலாளர் நன்றி தெரிவித்துள்ளார்.

பகிரவும்...