Main Menu

இனவாதத்தை எதிர்கொள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ அழைப்பு

தமிழ்த்தேசிய சக்திகள் ஒன்றிணைத்து, இனவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளதென தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ்.மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை), யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் தியாகராஜா நிரோஷ், மேலும் கூறியுள்ளதாவது, “எமது மக்களும் நாமும் அரசியல் ரீதியில் விடுதலை அடைய போராடிக்கொண்டிருக்கின்றோம்.

அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கான நீதி, இராணுவமயமாக்கம் என மனித உரிமைகள் ரீதியில் நாம் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றோம்.

அவ்வாறான ஓர் சூழ்நிலையில் இன்றைய நிகழ்வு என்பது மகிழ்வதற்கானதல்ல. மாறாக நாங்கள் கூட்டாக விடுதலைக்கான அரசியலை முன்கொண்டு செல்வதற்கான உத்திகளைக்கொண்டது.

மேலும், அரசியலமைப்பில் இலங்கையின் ஜனநாயகத் தன்மைக்கு அடிப்படையாக சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்த 19 ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படைகளை 20 ஆவது திருத்தச் சட்டத்தின் வாயிலாக மாற்றமடையச் செய்யவுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத முனைப்புக்கள் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஆளும் மற்றும் பிரதான எதிர்க்கட்சியிடம் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலில் பயணிக்கும் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரட்சியைக்காட்டாதிருப்பது வேதனையானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு வழிவகுத்த கட்சிகளுள் நாம் பிரதானமானவர்கள் என்ற வகையில் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பிணை ஓரணிப்படுத்தும் செயற்றிட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்த அரசியல், போராட்ட அனுபவம் எமது இயக்கத்திற்குக் காணப்படுகின்றது.

எனவே,அதனை தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் வழிநடத்தலில்,  நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனா கருணாகரன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட சகல தரப்புக்களையும் இணைத்துச் செயற்படுத்த எதிர்பார்க்கின்றோம். அர்ப்பணிப்பினை நாம் வெளிப்படுத்த தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...