Main Menu

இன,மத அடையாளங்களுடன் செயற்படும் கட்சிகளை இல்லாமல் செய்ய வேண்டும் – நிமல் ஜி புஞ்சிஹேவா

இலங்கையில் இன,மத அடையாளங்களுடன் செயற்படும் கட்சிகளை எதிர்காலத்தில் இல்லாமல்செய்யவேண்டிய தேவையுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட உத்தேச தேர்தல் சட்ட மறு சீரமைப்பு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் மக்கள் மயப்படுத்துவதற்காகவும் தேர்தல் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்ட.
மட்டக்களப்பு,நாவற்குடாவில் உள்ள தனியார் விடுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டலின் கீழ் தேர்தல் முறைகளுக்கான சர்வதேச ஒன்றியம்,ஜஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம் என்பன இணைந்து இந்த கலந்துரையாடலை முன்னெடுத்தன.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க,தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.இதனை அமுல்படுத்துவதற்கு தேவையான செயல்முறைகள் மற்றும் மக்கள் மத்தியில் இது தொடர்பில் உள்ள கருத்துகள் இதன்போது பெறப்பட்டன.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள்,கல்விப்புலத்தோர்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு முன்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட உத்தேச தேர்தல் சட்ட மறு சீரமைப்பு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகள் குறித்து பல்வேறுதரப்பினரிடமும்கருத்துகள் பெறப்பட்டன.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளடக்கப்படாத தேர்தல் ஒன்று நியாயமான தேர்தலாக உள்ளடக்கப்படமுடியாது.முறைப்படுத்தல் செயற்பாடுகள் நியாயமான ரீதியில் முன்னெடுக்கப்படவேண்டும்.தேர்தல்கள் மூலம் பெண்கள்,இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் உள்ளடக்கப்படவேண்டும்.

தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் சிறந்த அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்.அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் சட்டத்தில் செயற்படுத்தப்படவேண்டும்.ஒரு அரசியலில் பிரவேசிக்கும் உறுப்பினரின் சொத்துவிபரங்களை பொதுமக்கள் அறியவேண்டும்,ஒருவர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவாராயின் அவரது பதவி பறிக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் அமையவேண்டும்.

தேர்தல் குற்றங்களை விசாரணை செய்யும் வகையில் தேர்தல் நியாயசபையொன்று உருவாக்கப்படவேண்டும்.அதன்மூலம் எதிர்காலத்தில் நீதியான நியாயமான தேர்தல் ஒன்று நடாத்துவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தமுடியும்.

இனமத என்ற அடிப்படையில் 1933ஆம்ஆண்டு தொடக்கம் இனரீதியான கட்சிகள் தோற்றம்பெற்றன.இவ்வாறான கட்சிகள் மூலம் பிரித்தாளும் நிலைமையினை இல்லாமல்செய்யவேண்டும்.இவ்வாறான கட்சிகளுக்கு எதிராகவும் சில தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலையுள்ளது.

மாகாணசபை தேர்தல்கள் நடைபெற்று நீண்டகாலம் சென்றுள்ளது.இன்று மாகாணசபைகள் உள்ளதா என்னும் நிலை காணப்படுகின்றது.மக்கள் சபைகளை வேறு நபர்கள் ஆட்சிசெய்வதற்கு அனுமதிக்கமுடியாது.நாங்கள் சில விடயங்களை செய்யவேண்டும்.இல்லாது போனால் எமது எதிர்கால சமூகத்திற்கு நாங்கள் பொறுப்புக்கூறவேண்டிய நிலையேற்படும்.

பகிரவும்...