Main Menu

அமைதிவழிப் போராட்டக் காரர்கள் மீதான வன்முறையை நியாயப் படுத்த முடியாது- மன்னிப்புச் சபை

அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களிலும் அதிகாரத்திலிருந்தவர்களால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவர்கள் மீது தேவையற்ற வன்முறைகள் அல்லது தாக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதுடன், அவற்றுக்கு நீதியும் வழங்கப்படவில்லை எனவும் மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் “மக்கள் அமைதியான முறையில் கூடுவதற்கான சுதந்திரத்திற்கு தேவைக்கமைவாக ஏதேனும் கட்டுப்பாடுகள் காணப்படுமாயின், முதலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தாமாகவே கலைந்து செல்வதற்கு வாய்ப்பொன்று வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என்றும் மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்ட் என்பவர் அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில் வெள்ளையின பொலிஸ்காரர் ஒருவரால் முழங்காலினால் கழுத்து நசுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இச்சம்பவத்திற்குக் கண்டனம் வெளியிடும் வகையில் நேற்றுமுன்தினம் முன்னிலை சோசலிஷக் கட்சியினால் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு எதிராக ஆரம்பத்திலேயே பொலிஸாரினால் நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்த நிலையில், அதனைமீறி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்திருக்கும் கண்டனத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பகிரவும்...