Main Menu

அமைச்சர் பதவிக்கு உதயநிதி திறமையான இளைஞர்- அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அடுத்த கல்வியாண்டில் தமிழ்வழிப் பாடம் எல்லா வகுப்பிலும் நடத்தப்படும். பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டுதலின்படி பி.எச்.டி. போன்ற தகுதி பெற்ற தமிழ் படித்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். முதன்முதலாக தமிழ்வழி கல்வியை அறிமுகம் செய்தவர் கலைஞர். தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உள்ள உதயநிதிக்கு எல்லா தகுதியும், திறமையும் உள்ளது. மிக திறமையுள்ள இளைஞர். திரைத்துறை, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 1½ ஆண்டுக்கு முன்பே அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருக்க வேண்டும். இதை கால தாமதமாக நான் கருதுகிறேன். அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பதை முதலமைச்சர் நாளை அறிவிப்பார். முதலிலே அவரை அமைச்சராக ஆக்கி இருந்தால் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்திருப்பார். அவருக்கு வழங்க உள்ள பொறுப்பில் திறம்பட செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.