Main Menu

அதிகாலையில் சேவல் கூவுவது சரியா? பிரான்சில் வினோத வழக்கு

பிரான்சின் மேற்கு கடற்கரை அருகே உள்ள ‘St pierre d’oleron’ தீவைச் சேர்ந்த ஒருவர் அதிகாலையில் சேவல் கூவுவது தனக்கு  இடையூறாக இருப்பதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த பெண்ணுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.  இளஞ்சேவல் பிரான்ஸ் நாட்டுச் சின்னம் என்பதால் இந்த வழக்கு கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கு தொடர்ந்தவர் St pierre d’oleron தீவில் உள்ள தனது சொகுசுப் பங்களாவில் விடுமுறையை கொண்டாட வந்தவர்.

இதுகுறித்து பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கூறுகையில், நான் இங்கு 35 ஆண்டுகளாக வசித்து வருகிறேன், அவர்கள் ஆண்டிற்கு இருமுறை வருபவர்கள், என்றார். 

பெரும் செல்வந்தர்கள் கிராமப்புறங்களில் இதுபோன்ற சொகுசுப் பங்களாக்கள் வைத்துள்ளதால் இம்மாதிரியான வழக்குகள் பிரான்ஸ் நாட்டில் புதிதல்ல. ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் அழிவுப்பாதையில் உள்ளதை  இம்மாதிரியான வழக்குகள் பிரதிபலிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. 


St pierre d’oleron தீவின் மேயர் கிறிஸ்டோப் சியர் கூறுகையில், ‘இன்று சேவல் கூவும் சத்தம், நாளை கடற்பறவைகளின் சத்தம், அதன்பின் காற்றின் சத்தம்… ஏன் நாங்கள் பேசுவதையும் குற்றம் சொல்வார்களா’ என சாடினார். 

கடந்த 2018ம் ஆண்டில், அதிகாலையில் கோயிலில் அடிக்கும் மணி ஓசை தொந்தரவாக இருப்பதாக சொகுசுப் பங்களாவிற்கு விடுமுறையைக் கொண்டாட வந்தவர்கள் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...