அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியாவில் பேசவில்லை – வெளி விவகார அமைச்சர்
தேசிய பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வு விவகாரம் குறித்து இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீனவர் பிரச்சினை படகுகள் விடுவிப்பு விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அந்த சந்திப்புக்கள் குறித்து தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தே இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சந்திப்புக்கள் ஆக்கபூர்வமாக அமைந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இந்த விஜயத்தின்போது, அதிகாரப் பகிர்வு குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் தனது சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் அனைத்தும் வெளிவிவகார அமைச்சுக்குரிய விடயதானங்களாகவே காணப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.