Main Menu

அஜந்தனை விடுதலை செய்வதாக அமைச்சர் மனோ கணேசனிடம் ஜனாதிபதி உறுதி

வவுணதீவு காவற்துறையினர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான கதிர்காமத்தம்பி இராசகுமாரனை விடுதலை செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

வவுணதீவில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனை விடுதலை செய்யவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை மேற்படி விடயத்திற்கான உத்தரவினை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் மேலும்,

கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு, வவுணதீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிக்க ஜனாதிபதி, அமைச்சர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.

தற்போது கிடைக்கப் பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில், பொலிஸாரை கொலை செய்தது தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இவ்விடயத்தில் அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி இராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மாஅதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக அமைச்சர் மனோ கணேசனிடம், ஜனாதிபதி சற்று முன் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அஜந்தனின் மனைவியான செல்வராணி இராசகுமாரனுக்கு அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகம் அறிவித்துள்ளது.

பகிரவும்...