தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் இன்று உதயமாகிறது
தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் இன்று உதயமாகின்ற நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் இந்த புதிய மாகாணங்களுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் அறிவிக்கப்படுகின்றன.
தமிழகத்தின் 35 ஆவது மாவட்டமாக திருப்பத்தூரும், 36 ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டையும் இன்று (வியாழக்கிழமை) எடப்பாடி பழனிசாமியால் திறந்துவைக்கப்படவுள்ளன.
மேலும், முதல்வர் பழனிசாமி குறித்த நிகழ்வின் போது நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமியால் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததன் அடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்படும் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடியும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணமும் மற்றும் வேலூர் மாவட்டத்தில் புதிதாக குடியாத்தம் வருவாய் கோட்டத்துடன் கே.வி.குப்பம் என்ற புதிய வருவாய் வட்டமும் ஏற்படுத்தப்படுகின்றன.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழா, திருப்பத்தூர் டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
அத்ததுடன் ராணிப்பேட்டை மாவட்டத்தின் தொடக்க விழா, ராணிப்பேட்டை கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...