Main Menu

செலுத்தப்படாத மருத்துவக் கட்டணங்களை வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக வசூலிக்க திட்டம்

சமூகப் பாதுகாப்பு நிதியில் (Sécurité sociale) அதிகரித்து வரும் பற்றாக்குறையை சமாளிக்க, செலுத்தப்படாத மருத்துவ தொகைகளை (franchises médicales) நோயாளிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக வசூலிக்க வேண்டும் என்று கணக்காய்வு நீதிமன்றம் (Cour des comptes) பரிந்துரைத்துள்ளது.

இந்த நடைமுறை சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் ஏற்கனவே இடம்பெற்றிருந்தாலும், அதை செயல்படுத்த வேண்டிய அரசாணை வெளியிடப்படாததால் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. தற்போது அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்துகிறது.

மருந்துகள், மருத்துவர் ஆலோசனைகள் மற்றும் மருத்துவப் போக்குவரத்துக்கான சிறிய தொகைகள் பொதுவாக சமூகப் பாதுகாப்பு வழங்கும் பணத்திலிருந்து கழிக்கப்படுகின்றன. ஆனால் “tiers payant” முறையில் சிகிச்சை பெறும் சுமார் 35 இலட்சம் பேரிடமிருந்து இந்தத் தொகைகளை மீட்டெடுப்பது கடினமாக உள்ளது.

செலுத்தப்படாத இந்தக் மீதித் தொகைகளை நேரடியாக வங்கிக் கணக்குகளில் இருந்து வசூலித்தால், ஆண்டுக்கு சுமார் 500 மில்லியன் யூரோக்கள் வரை மீட்டெடுக்க முடியும் என்று கணக்காய்வு நீதிமன்றம் மதிப்பிடுகிறது. இருப்பினும், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வர அரசாணையும் தொழில்நுட்ப வசதிகளும் முதலில் ஏற்படுத்தப்பட வேண்டும்.