புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை
சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இலங்கை போக்குவரத்துச் சபையினால் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தூர இடங்களுக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக சுமார் 250 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்த விசேட சேவை ஏப்ரல் 9 முதல் 13 வரையிலும், மீண்டும் கொழும்பு திரும்புவோருக்காக ஏப்ரல் 17 முதல் 21 வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
இதேவேளை, புகையிரத திணைக்களம் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் கரையோர மார்க்கம், வடக்கு மற்றும் பிரதான மார்க்கங்களில் மேலதிக விசேட புகையிரதங்களைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் முதற்கட்ட மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன.
பயணிகளுக்கு நவீனமான மற்றும் தூய்மையான சூழலை வழங்கும் நோக்கில், தற்போதைய கட்டடங்கள் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு புதிய தகவல் மையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பேருந்துகளுக்காகப் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட வரிசைப் பகுதிகள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட சுற்றுப்புறச் சூழலுடன் இந்த நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கையளிக்கப்படவுள்ளது.
இம்முறை புத்தாண்டு காலத்தில் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால், இந்த நவீனமயமாக்கல் மற்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் ஊடாக மக்கள் நெரிசலின்றிப் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
