Main Menu

அமைச்சருடன் மோத வேண்டுமானால் நீதிமன்றம் செல்லுங்கள்; நோயாளிகளைப் பழிவாங்க வேண்டாம்” – சுகாதார அமைச்சர்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு எவ்வித அடிப்படையுமற்றது எனத் தெரிவித்துள்ள  அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நீதிமன்றத்தை நாடுமாறு அந்த சங்கத்திற்குப் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமன நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து இன்று (04) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

நியாயமான காரணங்களுக்காகப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், இந்த விவகாரத்தில் விவாதிப்பதற்குக்கூட எதுவுமில்லை.

பயிற்சி நியமனங்கள் சட்டவிரோதமானது எனக் கருதினால், நோயாளிகளின் உயிரைப் பிணைக் கைதிகளாக்காமல் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள். அங்கு நாம் சட்ட ரீதியாகப் பார்த்துக்கொள்ளலாம்.

அமைச்சருடன் முரண்பாடு இருந்தால் எனக்குச் சவால் விடுங்கள்; அதன் பாரத்தை அப்பாவி மக்கள் மீது சுமத்த வேண்டாம்.

பயிற்சி வைத்தியர்கள் அரசாங்க சேவையில் இணைவதற்காக விண்ணப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று (04) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.

இந்தக் கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இனிமேல் தாமதமாக விண்ணப்பிப்பவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கோ அல்லது ஊதியம் பெறுவதற்கோ வாய்ப்பு கிடைக்காது என்றும் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.