தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணி – ஐந்துமுனை போட்டி
தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவி வந்தது.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தொடர்பை பேணியிருந்த சசிகலாவுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மேலும், தங்கள் கூட்டணியில் ஏனைய கட்சிகளும் சேரலாம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக என்ற புதிய கட்சியை அண்மையில் தொடங்கியிருந்த சசிகலா, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே பா.ம.க. நிறுவனர் ராமதாஸுடன் நேற்று மாலை விசேட சந்திப்பில் ஈடுபட்ட சசிகலா, பாமகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும், விரைவில் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் ஐந்துமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
