Main Menu

ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து தெஹரான் நோக்கி சென்றது

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ‘IRIS DENA’ கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் ஈரான் நோக்கிப் புறப்பட்டு சென்றுள்ளது.

மத்தள விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 09.29 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டு சென்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை அந்நாட்டுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்த ஈரான் கப்பல் அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக விபத்துக்குள்ளானது.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ரக ஏவுகணை மூலம் ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்திருந்திருந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அவற்றை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த விமானம் மத்தள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது சென்றுள்ளது.

சுமார் 180 பேர் இந்தக் கப்பலில் இருந்ததாக ஈரான் அரசாங்கம் கூறியிருந்த நிலையில், 35 பேர்  மாத்திரமே இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன், சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் உடல்களே நேற்று இரவு  ஈரான் நோக்கி கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் பயணித்த பெரும்பாலானவர்கள் நீரில் மூழ்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது