Main Menu

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்வு – கனிமொழி

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் ‘இந்திய வம்சாவளி தமிழர்கள்’ என்ற பதத்துக்கு மேலதிகமாக ‘இலங்கைத் தமிழர்கள்’ எனும் பதத்தையும் உள்வாங்குவதன் ஊடாக, இந்த விடயத்தினை ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையில் இருந்த குறித்த எண்ணிக்கையான இந்திய வம்சாவளி தமிழர்கள், மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் அந்த எண்ணிக்கை இதுவரை பூரணமடையாததன் காரணமாக அதில் ‘இலங்கைத் தமிழர்கள்’ எனும் பதத்தையும் இணைக்கமுடியுமா என்பது குறித்து ஆராய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனூடாக இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கமுடியுமா என்பது பற்றியும் ஆராய்ந்து வருவதாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.