Main Menu

3-வது கட்டமாக இலங்கைக்கு கப்பல் மூலம் சென்ற ரூ.74 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மே மாதம் 18-ந் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து முதல்கட்டமாக 9.045 டன் அரிசி, 50 டன் ஆவின் பால்பவுடர், 8 டன் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து 2-ம் கட்டமாக கடந்த 22-ந் தேதி ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் 3-ம் கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் இன்று காலை வி.டி.சி. சன் கப்பல் மூலம் சென்றது. அதனை கனிமொழி எம்.பி., சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். இந்த கப்பலில் ரூ. 54 கோடி மதிப்பிலான 16.356 டன் அரிசி, ரூ. 6 கோடி மதிப்பிலான 201 டன் பால்பவுடர், ரூ. 14 கோடி மதிப்பிலான 39 டன் உயிர்காக்கும் மருந்துகள் என மொத்தம் ரூ. 74 கோடி மதிப்பில் 16.596 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

பகிரவும்...