ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்: முடங்கியது சர்வதேச போக்குவரத்து
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முழுமையாக மூடியுள்ளது.
இனி எந்தவொரு கப்பலும் இந்த நீரிணை ஊடாகப் பயணிக்க அனுமதி இல்லை என ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இலக்குகளுக்கு எதிராக ஈரான் முன்னெடுத்து வரும் பழிவாங்கும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்த அதிரடித் தாக்குதல்களில் இதுவரை 14 அமெரிக்க இராணுவத் தளங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, இப்பகுதிக்குச் செல்லும் அனைத்து சர்வதேச விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமது வான்பரப்புகளை மூடியுள்ளன.
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால்,
உலகளாவிய எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
