Main Menu

மனிதாபிமான அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் – உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை!

கொரோனா தொற்றால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் இத்தருணத்திலாவது விடுதலை செய்ய வேண்டும் என கைதிகளின் உறவினர்கள் சர்வமத தலைவர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சர்வமத கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணம் தியாகி அறக்கொடை மண்டபத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.

ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம் எனும் தொனிப் பொருளில் குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால், இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறை இருட்டில் இருக்கும் எமது உறவுகளை தற்கால கொரோனா வைரஸ் தொற்றும் வெகுவாக பாதித்துவரும் நிலையில் கருணை அடிப்படையில் மனிதாபினமாக இத் தருணத்திலாவது அவர்களை விடுவிக்க வேண்டுமெனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் உள்ள சர்வமத பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சிறையிலுள்ள எமது உறவுகளை விடுவிக்க மதத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கண்ணீர் மல்க உறவுகள் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு கொரோனாவால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள உறவுகளை மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் விடுவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஐனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் மதத் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...