Main Menu

பல நூற்றாண்டுகளாக சாபத்திற்கு பயந்து தீபாவளி கொண்டாடாத கிராம மக்கள்

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேற்று பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி விமரிசையாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

ஆனால் இமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்ணின் சாபத்திற்கு பயந்து பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத வினோதம் இருந்து வருகிறது.

இமாசல பிரதேசத்தில் ஹமிர்பூர் மாவட்டத்தில் சம்மூ என்ற கிராமம் உள்ளது. பல நூற்றாண்டு களுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த திருமண மான பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருந்தார். அவர் தீபாவளி கொண்டாடு வதற்காக தன் தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

அப்போது மன்னனின் அரசவையில் சிப்பாயாக பணிபுரிந்து வந்த அவரது கணவர் திடீரென இறந்து விட்டார். இந்த செய்தி தீபாவளி கொண்டாட வந்த அவரது மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்டு பேரதிர்ச்சியடைந்த அந்த பெண் அழுது புரண்டார். துக்கம் தாங்காமல் இருந்த அந்த பெண் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அவர் அந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடக் கூடாது என்று சபித்ததாக புராண கதைகள் கூறுகிறது.

அன்றிலிருந்து இந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. பக்கத்து கிராமங்களில் தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு சத்தம் கேட்கும் நேரத்தில் இங்கு மயான அமைதி நிலவுகிறது.

தீபாவளி பண்டிகையின் போது இந்த கிராமத்தில் வீடுகளில் தீபம் ஏற்றுவதில்லை. பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்காது. அதனையும் மீறி தீபாவளி கொண்டாடினால் கிராம மக்களுக்கு துரதிஷ்ட மும், பேரழிவும் ஏற்படும். மற்றும் மரணத்தை வரவழைக்கும் அபாயமும் ஏற்படும் என்று இளைய சமூகத்தினரை பெரியவர்கள் எச்சரித்துள்ளனர்.

பகிரவும்...