Main Menu

நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம்- காணாமல் போனோரின் உறவுகள்!

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால், வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, எமது உறவுகளின் உண்மைநிலையை வலியுறுத்தி மூன்று வருடங்களிற்கும் மேலாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆனாலும் எமக்கான நீதியினை எந்த ஒரு அரசாங்கமும் வழங்கவில்லை. எமது உறவுகளை தருமாறே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம்.

நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. எனவே எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம்.

இதேவேளை முல்லைத்தீவில் ஊடகவியலாளரை இராணுவத்தினர் தாக்கியமை அநீதியான செயற்பாடு. மக்களின் பாதுகாப்புக்காகவே இராணுவம் நிலைகொண்டுள்ளதாக கூறி, தமிழ் மக்களை பாதிக்கும் செயற்பாடுகளையே இந்த இராணுவம் முன்னெடுத்து வருகின்றது.

எனவே அதனையும் கண்டிக்கின்றோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...