Main Menu

தமிழகம் முழுவதும் பலத்த மழை- பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கின

நெல்லை மாவட்டத்தில் கூட்டப்புளி, கூடுதாழை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று 6-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்து செல்லும் காட்சிசென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது.

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அன்று முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய மறுநாளே (அக்டோபர் 26-ந் தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி மற்றும் ஆந்திரா வரையிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழை வருகிற 6-ந்தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி நோக்கி நகரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதலே இந்த 4 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையிலும் மழை பெய்து கொண்டு இருந்தது. சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளான புழல், சோழவரம், மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
சென்னையில் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் நகரின் பல இடங்களில் மழை பெய்தது. திருவொற்றியூர், மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

எழும்பூரில் நள்ளிரவு 3 மணியளவில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். 3 மணியளவில் பெய்யத் தொடங்கிய இந்த மழை சுமார் 1 மணிநேரத்துக்கும் மேல் இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. பெரம்பூர், மூலக்கடை, புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டு இருந்த சம்பா இளம் நாற்றுகள் முற்றிலும் மூழ்கி உள்ளது. மேலும் மழை இடைவிடாது பெய்து வருவதால் வயல்வெளிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் தரையோடு சாய்ந்து கிடக்கின்றன.

திருவாரூர் மாவட்டத்திலும் தொடர் மழையால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன.

நாகை மாவட்டத்திலும் அறுவடைக்கு தயாரான 6 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 300 ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கும் நிலையில் உள்ளது.

டெல்டா மாவட்டம் முழுவதும் பெய்து வரும் இடைவிடாத தொடர் கனமழை காரணமாக 26 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி உள்ளன. இதனை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடித்தபடி உள்ளனர்.

வயல்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர். வடிகால் வாய்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் மழை இன்னும் 4 நாட்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு முறையான கணக்கெடுப்பை நடத்தி உண்மையான நிலவரத்தை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு நெற்பயிர்களின் பாதிப்புக்கு உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளதால் விவசாயிகள் நலன் கருதி பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதுடன், உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கரூர் ஆகிய 20 மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது.

இன்று காலையிலும் மழை நீடித்தது. இதன் காரணமாக இந்த 20 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார், கடநாநதி, கருப்பாநதி, நாம நதி ஆகிய 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கூட்டப்புளி, கூடுதாழை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று 6-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குண்டேரி பள்ளம் அணை உள்பட பல்வேறு அணைகள் நிரம்பி உள்ளன.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. ஆழியாறு பகுதியில் 77 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சேலம், நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி முட்டல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களையும், ஆயிரம் வீடு களையும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

குமரி மாவட்டத்திலும் தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அகஸ்தீவரம் தாலுகாவில் 17 வீடுகளும், தோவாளை பகுதியில் 5 வீடுகளும், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய பகுதிகளிலும் வீடுகள் இடிந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 75 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன.

தமிழகம் முழுவதும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

பகிரவும்...