Main Menu

சென்னையில் நாளை முதல் முழு ஊரடங்கு – போக்குவரத்து காவல் துறையினரின் அறிவிப்பு

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்த வருவதனால், நாளை முதல்  மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருகிறது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின்போது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு முன்னரே விளக்கமளித்துள்ள நிலையில், சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை, தனியார் வாகனங்களை அனுமதியின்றி வெளியே எடுத்தால் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தெரிவித்துள்ளது.

அதற்கமைய எவ்வித அனுமதிச் சீட்டுமின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துக் பொலிஸ் துறை எச்சரித்துள்ளது.

அதேபோல் போலியான அனுமதிச் சீட்டுகளை வைத்து வாகனங்களை இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 பிரிவின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கி இருக்கும் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவி புரிவோர் மற்றும் அரசு, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்படும்.

அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொது மக்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மட்டும் நடந்து சென்று பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். பொது மக்கள் பிற இடங்களுக்கு வாகனங்களில் செல்வது முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது.

வீடுகளுக்கு சென்று உணவு வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணி புரியும் நிறுவனத்திடமிருந்து உரிய அடையாள அட்டைகளைப் பெற்று வாகனங்களில் செல்லுதல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...