Main Menu

எமது உரிமைகள், உணர்வுகளை அழிக்க முடியாது- நினைவுத்தூபி அழிப்புக்கு சாணக்கியன் கடும் கண்டனம்!

எமது உரிமைகள், உணர்வுகளை அழிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்கள்!

போர் வெற்றியைக் கொண்டாடும், பறைசாற்றும் தூபிகள் மற்றும் சின்னங்கள் வட மாகாணத்தில் பல இடங்களில் காணப்படும் நிலையில், இறுதி யுத்தத்தில் இறந்த எமது உறவுகளை நினைவுகூரும் தூபிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

இதன்மூலம், அவர்கள் எதனை வலியுறுத்த முயல்கின்றனர்? இதில்கூட எமது மக்களுக்கான உரிமை இல்லையா? ஆட்சி மாற்றமும் அடிப்படை உரிமையில்லா அபிவிருத்திக்கான மாற்றமுமே இதற்கான காரணம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.