ஈரானின் ஆளில்லா விமானங்கள் போன்ற போலி விமானங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்-படுத்துவதாக குற்றச்சாட்டு
ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதாகச் சித்தரிப்பதற்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ஆளில்லா விமானங்களை போன்ற போலி விமானங்களை பயன்படுத்துவதாக ஈரான் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.
அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் நடத்தியதாகக் காட்டும் நோக்கில், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் தயாரிப்பான ‘ஷாஹெட்’ (Shahed) ஆளில்லா விமானங்களை பிரதிபலிக்கும் ‘லூகாஸ்’ (Lucas) ரக விமானங்களை பயன்படுத்தித் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
துருக்கி, குவைட் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் அண்மைய நாள்களாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இவ்வாறான போலியான ஆளில்லா விமானங்கள் மூலமே நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது ..
ஈரானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் பிளவுகளையும் மோதல்களையும் உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
இதேநேரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இலக்குகளை மாத்திரமே ஈரான் தாக்குவதாகவும், தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கப்படுவதாகவும், ஈரான் இராணுவ தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.
