இந்தியாவில் அனைத்து தரப்பினரும் எனக்கெதிராக செயற்படுகின்றனர்: நித்தியானந்தா ஐ.நாவில் முறைப்பாடு!
இந்திய அரசு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக்கட்சி என அனைத்து தரப்பினரும் தமக்கு எதிராக செயல்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நித்யானந்தா முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்ச்சை சாமியாரான நித்தியானந்தா மீது பாலியல் முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஐ.நா சபைக்கு முறைப்பாடு கடிதம் ஒன்றை நித்தியானந்தா அனுப்பியுள்ளாதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
46 பக்கங்கள் கொண்ட குறித்த கடிதத்தில், பா.ஜ.க மற்றும் பிற இந்து அமைப்புகள், சிறுபான்மையினராக உள்ள ஆதி சைவ மதத்தினரை அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், இஸ்லாமிய, இந்து அமைப்புகளும் உளவியல் ரீதியாக தங்களை புண்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
9 பாலினங்களையும், ஓரின சேர்க்கையையும், பெண்களுக்கான உரிமைகளையும் தங்களின் ஆதி சைவ மதம் ஆதரிப்பதாகவும், ஆனால் பா.ஜ.க உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களை தாக்குவதாகவும் குறித்த கடித்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆதி சைவ மதத்தில் உள்ள பெண் சன்னியாசிகளை கைது செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ள அவர், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தன் மீது 150 பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.நா. இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.