Main Menu

அரசாங்கத்தின் நாடக அரசியல் விரைவில் முடியும் – மனோ கணேசன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொய் முகத்தை நிலக்கரி கையூட்டல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகவும், இவர்களின் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சி மற்றும் இந்தியப் பயணம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தரங்குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக அரிசி இறக்குமதியின் போது மோசடியில் ஈடுபட்டு ‘கருப்புப் பட்டியலில்’ சேர்க்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கே, தற்போது நிலக்கரி விநியோக ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது.

தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி குறைவடையும் என்றும், இதனால் மேலதிகமாக நிலக்கரி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு செலவுகள் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையின்றி மக்களிடம் கூறிய பொய்களையே மூலதனமாக வைத்து இந்த அரசாங்கம் தற்போது ஆட்சி நடத்தி வருவதாக அவர் குற்றம்சாடினார்.