Main Menu

“அமைதிக்காகக் குரல் கொடுக்க அஞ்சமாட்டேன்”: ஜனாதிபதி ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்கு போப் லியோ பதிலடி

ஈரான் போர் விவகாரத்தில் வத்திக்கான் மற்றும் வெள்ளை மாளிகைக்கு இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட விமர்சனங்கள் குறித்து போப் லியோ XIV தனது அதிரடியான பதிலை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், போப் லியோ “குற்றங்களுக்கு எதிராக மென்மையானவர்” என்றும், அவர் ஒரு “தீவிர இடதுசாரி” போலச் செயல்படுவதாகவும் சாடியிருந்தார்.

மேலும், போப் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், போப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அல்ஜீரியா செல்லும் விமானத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, போப் லியோ புன்னகையுடன், “அவர் கருத்துத் தெரிவித்த அந்தத் தளத்தின் பெயரே முரணாக உள்ளது. அதற்கு மேல் நான் எதுவும் சொல்லத் தேவையில்லை,” என்று கிண்டலாகப் பதிலளித்தார்.

“ட்ரம்ப் நிர்வாகத்திற்கோ அல்லது சுவிசேஷத்தின் செய்தியை உரக்கச் சொல்வதற்கோ நான் பயப்படவில்லை. அதுவே எனது பணி,” என்று போப் திட்டவட்டமாகக் கூறினார்.

தான் ஒரு அரசியல்வாதி அல்ல என்றும், ஜனாதிபதி; ட்ரம்ப்புடன் தனிப்பட்ட விவாதத்தில் ஈடுபடத் தான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சுவிசேஷத்தின் செய்தி சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

ரோம் நகரிலிருந்து அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகிய நான்கு நாடுகளுக்கு 10 நாட்கள் பயணமாக போப் லியோ புறப்பட்டுள்ளார்.

“உலகில் இன்று பல அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள், பலர் துன்பப்படுகிறார்கள்.அமைதிக்கும் பேச்சுவார்த்தைக்கும் ஒரு சிறந்த வழி இருக்கிறது என்பதை யாராவது ஒருவர் உரக்கச் சொல்லித்தான் ஆகவேண்டும்,” என்று அவர் தனது பயணத்தின் நோக்கத்தை விளக்கினார்.