Main Menu

இலங்கைக்கு உதவ சீனா எப்போதும் தயாராக உள்ளது – இலங்கைக்கான சீனத் தூதுவர்

இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவுவதற்கு சீனா எப்போதும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி ஷென்ஹாங் தெரிவித்துள்ளார்.

அக்குரணை, பானாகல சீன மொழி மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று  சீனத் தூதுவர் ஷி ஷென்ஹாங் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை – சீன பௌத்த கலாசார பரிமாற்ற மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மானாகல புராண விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய பரணகம ஞானவிமல தேரரின் வழிகாட்டலில், இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் அனுசரணையுடன் இந்த அக்குரணை பானாகல சீன மொழி மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதன்போது அப்பகுதி மக்களுக்காக 20 இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் விநியோகிக்கப்பட்டதுடன், ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி ஷென்ஹாங்,

“சீனாவும் இலங்கையும் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய உறவைப் பேணி வரும் உற்ற நண்பர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இலங்கையர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும், சீனா முதலில் முன்வந்து அந்த நிலையிலிருந்து மீள உதவுகிறது. தற்போதைய போர்ச் சூழலால் இலங்கையர்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும், அதிகளவிலான எரிபொருளை நன்கொடையாக வழங்க முதலில் முன்வந்த நாடு சீனாதான் என்று நான் நம்புகிறேன். இயற்கை அனர்த்தங்களின் போது கூட, சேதமடைந்த பாலங்கள் போன்ற கட்டுமானங்களை மேற்கொண்டு சீனா தனது ஒத்துழைப்பை வழங்கியது. அதேபோல், இலங்கையர்களுக்குத் தொடர்ச்சியாக உதவிகளை வழங்க சீனா எதிர்பார்க்கிறது” எனத் தெரிவித்தார்.