Main Menu

போர் நிறுத்தத்தின் பின்னரும் உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய எரிபொருள் நெருக்கடி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்ட போதிலும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

40 நாட்கள் நீடித்த மோதல்களுக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே இருவார கால போர்நிறுத்தம் கடந்த புதன்கிழமை காலை அமுலுக்கு வந்தது.

இந்த உடன்படிக்கையின் மிக முக்கியமான அம்சம் ஹோர்முஸ் நீரிணைஊடாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் அனுமதிப்பதாகும்.

அமைதிக்காலத்தில் உலகின் 20 சதவீதமான மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றது.

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சிதறிக்கிடக்கும் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப பல வாரங்கள் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் காரணமாக மூடப்பட்ட எண்ணெய் கிணறுகளை மீண்டும் இயக்குவது செலவுமிக்கது மற்றும் சிக்கலானது என்பதால், உடனடி விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவக்கூடும்.

போர்நிறுத்தக் காலத்தில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை, விநியோகச் சங்கிலியில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கும் என அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தைகளின் முடிவுகளைப் பொறுத்தே எரிசக்தி சந்தையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.