Main Menu

இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்க-ளிடையே சந்திப்பு

இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புது டெல்லியில் நேற்றைய (08) தினம் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மானை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததோடு, பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் பங்களாதேஷ் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் ஹுமாயூன் கபீரும் உடனிருந்தார்.

பங்களாதேஷின் புதிய அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமாக செயற்படுவதற்கும், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கும் இந்தியா விரும்புவதாக ஜெய்சங்கர் இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், தற்போதுள்ள இருதரப்பு வழிமுறைகள் மூலம் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஆராய இரு தரப்பினரும் இதன்போது ஒப்புக்கொண்டனர்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ சந்திப்புகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர இரு நாட்டு வெளிவிகார அமைச்சர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விவாதித்தனர்.

இந்தியப் பயணத்தின்போது பங்களாதேஷ் வெளிவிகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரையும் சந்தித்தார்.