Main Menu

இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றில் 1300 கோடி ரூபா மோசடி

இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானதை அடுத்து, கொழும்பு பங்குச் சந்தையில் அந்த வங்கியின் பங்குப்பரிமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

ஆரம்பத்தில் இந்த மோசடியின் அளவு குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், வங்கியின் உள்ளக விசாரணைகளின் மூலம் இது 13.2 பில்லியன் ரூபாய் அதாவது 1300 கோடி ரூபாய் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் கணினி அணுகல் வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், சட்ட அமலாக்கத்துறையினரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட செயல்பாட்டுப் பிரிவு, புதிய பணியாளர்கள் மற்றும் திருத்தப்பட்ட அறிக்கையிடல் வழிமுறைகளுடன் தனி மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வங்கியின் செயல்பாடுகள் முழுவதும் கூடுதல் அணுகல் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வளவு பெரிய தொகை மோசடி செய்யப்பட்டிருந்தாலும், வங்கியின் வாடிக்கையாளர்களின் வைப்புப்பணம் மற்றும் மீதிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், அவை பாதுகாப்பாக இருப்பதாகவும் வங்கி நிர்வாகம் மிகத்தெளிவாக உறுதியளித்துள்ளது.

இந்த நிதியிழப்பு காரணமாக 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கிக்கு சுமார் 4.0 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 990 பில்லியன் ரூபா எனவும், மொத்த சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில் இது 0.7 சதவீதமே என்பதால், வங்கியின் நிதி ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளதுடன், பங்குதாரர்களுக்கு வழங்கப்படவிருந்த ரொக்க லாபப்பங்கீடுகளை (Cash Dividends) உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும், வங்கியின் கிளைகளை விரிவாக்கம் செய்வதற்கும், ஏனைய தேவையற்ற செலவுகளை மேற்கொள்வதற்கும் மத்திய வங்கி தற்காலிகத் தடையை விதித்துள்ளது.

மோசடி, அதன் காரணங்கள் மற்றும் வங்கியின் அமைப்புகள் மற்றும் செயல்முறைகளின் போதுமான தன்மை ஆகியவற்றை முழுமையாகவும் பாரபட்சமின்றியும் ஆய்வு செய்வதற்காக, வாரியம் ஒரு சுயாதீன தடயவியல் தணிக்கையாளரையும் நியமித்துள்ளது.

அந்த ஆய்வின் நோக்கம் மற்றும் முடிவுகள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் அன்றாட நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி தொடர்வதுடன், இழந்த நிதியை மீட்டெடுப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.