Main Menu

எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தனது வேட்பு மனுவை இன்று (ஏப் 06) தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்.9-ம் தேதி வெளியாகிறது.
இதனிடையே, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப் 06) வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் 8-வது முறையாக எடப்பாடியில் களம் காண்கிறார். அதோடு, மயிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கலின் முதல் நாளான (மார்ச் 30) அன்றே கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் மனுத் தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைவதால், பல்வேறு கட்சியினரும் மனு தாக்கலில் மும்முரம் காட்டி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு அச்சம்பத்தில் உள்ள மேற்கு தாலுகா அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தருமபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி ஆயிரக் கணக்கானோருடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.