Main Menu

ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி

உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில், இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு, நமது இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னத குணங்களால் நிரப்பி, ஒரே தாயின் பிள்ளைகளாகப் பேதங்களை மறந்து, இதயத்தால் ஒன்றிணைந்த ஒரே இலங்கை நாட்டின் குடும்பமாக முன்னோக்கிச் செல்வோம்! அதற்காகச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது,

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன் உயிர்த்த ஞாயிறு தினத்தை இன்று (05) கொண்டாடுகின்றனர்.

இது, நம்பிக்கை, புதிய மாற்றம் மற்றும் கருணையின் நித்திய சக்தியை  நினைவூட்டுகின்றது.

உயிர்த்த ஞாயிறு என்பது ஒரு மத நிகழ்வு என்பதைத் தாண்டி, அது மனிதாபிமானம், அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை மீண்டும் நினைவுபடுத்தும் கிறிஸ்தவர்களின் கலாசார பண்டிகையாகும்.

மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, உறுதியான சங்கற்பமும் அர்ப்பணிப்பும் இருந்தால் இருளை வென்று ஒளியையும், பயத்தை வென்று நம்பிக்கையையும், வேதனையை வென்று நித்திய மகிழ்ச்சியையும் அடைய முடியும் என்பதைத் தமது வாழ்வின் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

தமக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவுக்காக ஒன்றிணைந்து நின்ற மக்கள், உலகிற்கு ஒற்றுமையின் நற்செய்தியை வழங்கினர்.

தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

பகைமையை முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் போருக்குப் பதிலாக, உலக மக்கள் அனைவரும் அமைதியையும் சகவாழ்வையுமே விரும்புகின்றனர்.

இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தில் அமைதியை நோக்கிய பாதை மலர வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு, நமது இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னத குணங்களால் நிரப்பி, ஒரே தாயின் பிள்ளைகளாகப் பேதங்களை மறந்து, இதயத்தால் ஒன்றிணைந்த ஒரே இலங்கை நாட்டின் குடும்பமாக முன்னோக்கிச் செல்வோம்! அதற்காகச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.

துயருற்ற மக்களின் இரட்சிப்பிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டதன் பின்னர் மரணத்தின் இருளைத் தோற்கடித்து உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் கிறிஸ்தவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் கருணையும் அமைதியும் நிறைந்த இனிய உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துகள் – என்று கூறியுள்ளார்.