தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் திகதி இடம்பெறுகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் இன்று அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி நடைபெறுகிறது .
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
824 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2.19 இலட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. தேர்தல் பணிகளில் 25 இலட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். 8.5 இலட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதேநேரம் தமிழ் நாட்டில் மே 10 ஆம் திகதி சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் 75 ஆயிரத்து 032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில், நகர்ப்புரங்களில் 30 ஆயிரத்து 967 வாக்குச்சாவடிகள், கிராமப்புறங்களில் 44 ஆயிரத்து 065 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளார்கள். ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி. பெண் வாக்காளர்கள் 2.89 கோடி. மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 உள்ளனர் .
தமிழ்நாட்டில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 இலட்சமாகும் . 20 வயது முதல் 29 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 1.05 கோடியாக உள்ளது.
