டெல்லியில் விமான சேவைகளுக்கு கடும் பாதிப்பு
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் இன்று (7) காலையில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது
இது தொடர்பாக விமான நிலைய ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதை விரைவில் தீர்க்க விமான நிலைய நிர்வாகம் உட்பட அனைத்து தரப்பினரும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
விமானப் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளமையினால் 100 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
