இலங்கையில் AIஇன் பயன்பாடு அதிகரிப்பு
இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் காட்டியுள்ளது.
தெற்காசியாவில் தொழிலாளர் சந்தையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, நேபாளம் மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது தெற்காசியாவில் பூட்டானும் இலங்கையும் AI ஐப் பயன்படுத்தும் அதிக பணியாளர்களைக் கொண்ட நாடுகளாக உருவெடுத்துள்ளன.
எனினும், தெற்காசிய நாடுகளில் AI மனித நிரப்பியாக அதாவது மனித திறன்களுடன் தொழில்நுட்பத்தைச் சேர்ப்பதில் இலங்கை குறைந்த இடத்தில் உள்ளது என்றும், திறன்களை மேம்படுத்தாமல் AI பயன்பாடு விரைவுபடுத்தப்பட்டால் வேலை இழப்புகள் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இலங்கையில் AI தொடர்பான வேலைவாய்ப்புச் சந்தை, தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளை விட வேகமாக விரிவடைந்து வருகிறது, மேலும் 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள அனைத்து தொழில்முறை மற்றும் நிர்வாக வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் 7.3 சதவீதத்திற்கு AI தொடர்பான திறன்கள் தேவைப்பட்டுள்ளன.
இது பிராந்தியத்திலேயே அதிகபட்ச பங்கு என்றும், இந்தியாவில் இது 5.8% ஐத் தாண்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புகள் நகர்ப்புறப் பகுதிகளில் பரவி, தொழில்முறை மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) சேவைத் துறைகளில் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் நிதித் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு AI பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இலங்கையில் வலுவான AI வேலைவாய்ப்புச் சந்தை இருக்க வேண்டும் என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில், AI பயன்பாடு காரணமாக தெற்காசியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்புகளில் சுமார் 7% அதிக ஆபத்தில் உள்ளதாகவும், அழைப்பு மைய அதிகாரிகள், கணக்காளர்கள், ஒப்பு நோக்குபவர்கள், கணினி மென்பொருள் போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் ஏற்கனவே சரிவு காணப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், ChatGPT பயன்பாடு குறித்து உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தெற்காசியாவில் இரண்டாவது அதிக தனிநபர் ChatGPT பயன்பாடு கொண்ட நாடாக இலங்கை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் மாலைத்தீவு முதலிடத்தில் உள்ளதுடன், இலங்கைக்கு அடுத்தபடியாக அதிக ChatGPT பயன்பாடு கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
அத்துடன், இந்த AI பயன்பாட்டினால் அதிகப் பலன்களைப் பெறக்கூடிய கொள்கை ரீதியான வாய்ப்புகள் குறித்தும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது AI கண்டுபிடிப்பாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல், STEM கல்வியை விரிவுபடுத்துதல், நம்பகமான மின்சாரம் மற்றும் இணைய உட்கட்டமைப்பில் முதலீடு செய்தல், அத்துடன் தொழிலாளர் நகர்வு மற்றும் வேலைவாய்ப்பு வசதி அமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பகிரவும்...