எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 மாலுமிகள் நாடு திரும்பினர்
எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல் பாதுகாவலர்கள் விடுவிக்கப்பட்டு நேற்று நாடு திரும்பினர்.
எரித்திரியாவில் ஒரு வருடமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல் பாதுகாவலர்களை (Naval Guards) விடுவித்துக் கொள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
Seagull Maritime நிறுவனத்திற்குச் சொந்தமான ஐரோப்பிய கப்பல் ஒன்று, அஸர்பைஜான் கப்பற்தளபதியின் தலைமையில் சேவையில் ஈடுபட்டிருந்தபோது, எரித்திரிய கடல் பகுதிக்குள் நுழைந்ததால், அதில் பணிபுரிந்த 6 மாலுமிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07 ஆம் திகதி முதல் அந்நாட்டு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களை விடுவிப்பதற்காக பல உயர்மட்டத் தலையீடுகள் செய்ய வேண்டியிருந்ததுடன், கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம் இதற்கான ஒருங்கிணைப்பை வழங்கியது.
இலங்கை பாதுகாப்புப் படையில் பணியாற்றியுள்ள இந்த இலங்கையர்களை விடுவிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் நேரடியாக தலையிட்டு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.
அமைச்சரின் இராஜதந்திரத் தலையீட்டின் பேரில், 6 இலங்கை மாலுமிகளும் நேற்று (24) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்த 6 மாலுமிகளை வரவேற்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மற்றும் ஆபிரிக்க விவகாரப் பிரிவின் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், வந்தடைந்த அறுவரும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...