நீக்கப்பட்ட பாதுகாப்பு பிரிவு மீண்டும் வேண்டும் – நீதிமன்றத்தை நாடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
நீக்கப்பட்ட தமது பாதுகாப்பு பிரிவினரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவொன்று பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஸ தமது சட்டத்தரணிகள் மூலம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல், தமது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் குழுவிலிருந்து 60 அதிகாரிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர் என்றும், மற்ற அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு தரப்பினர் யாரும் இல்லை என்றும், தமது பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தசாப்தங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்த தாம், பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், தமது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறுகிறார்.
பிரதிவாதிகள் தமது பாதுகாப்பை தன்னிச்சையாக நீக்கியதன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மஹிந்த ராஜபக்ஸ நீதிமன்றத்தை கோரினார்.
