17 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட்
இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட் 10.17 க்கு விண்ணில் ஏவப்பட்டது.
2026 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ரொக்கெட் இதுவாகும்.
இதில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்’ என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 க்கு ஆரம்பமானது.
முன்னதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் நேற்றுமுன்தினம் காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். கோவிலில் பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட் மாதிரியை மூலவர் ஏழுமலையான் காலடியில் வைத்து அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள் செய்தனர்.
பகிரவும்...