வரலாறு படைக்கும் 35 வயது இளைஞர்: நேபாள அரசியலில் புதிய சகாப்தம் தொடக்கம்
நேபாள அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்த பழமைவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி, 35 வயதான ராப் இசைக்கலைஞர் பாலேந்திர ஷா இன்று அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கிறார்.
கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சிமிக்கப் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், பாலேந்திர ஷாவின் ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி (Rastriya Swatantra Party) அமோக வெற்றி பெற்றுள்ளது.
‘பாலென்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். 2013-ல் ராப் இசைப் போட்டிகளில் பங்கேற்றுப் புகழ்பெற்ற இவர், தனது பாடல்கள் மூலம் நேபாளத்தின் ஊழல் மற்றும் சமூகச் சீர்கேடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
2022-ஆம் ஆண்டு காத்மாண்டு மாநகர மேயராகச் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றதே இவரது அரசியல் வாழ்வின் முதல் திருப்புமுனை.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கோட்டையான ஜாப்பா (Jhapa) தொகுதியிலேயே அவரை வீழ்த்தி பாலேந்திர ஷா சாதனை படைத்துள்ளார்.
நேபாளத்தின் பழைய அரசியல் கட்டமைப்புகளைத் தகர்த்து, இளைஞர்களின் நம்பிக்கையாக உருவெடுத்துள்ள இவர், தனது பதவியேற்புக்கு முன்னதாக ‘நேபாளம் சிரிக்கிறது’ என்ற நம்பிக்கையூட்டும் ராப் பாடல் ஒன்றை வெளியிட்டு வெற்றியைத் தாரை தப்பட்டையுடன் கொண்டாடியுள்ளார்.
எனினும், இவரது பயணம் சவால்கள் நிறைந்ததாகவே கருதப்படுகிறது. மேயராக இருந்தபோது நடைபாதை வியாபாரிகள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுத்ததாக எழுந்த விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் 12 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் போன்ற இவரது பிரம்மாண்டமான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியில் அவர் உள்ளார்.
குறிப்பாக, கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களில் உயிரிழந்த 77 பேரின் மரணம் குறித்த விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து நீதி வழங்குவது இவருக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும்.
ஆனாலும், ஒரு சாதாரண ராப் பாடகராகத் தொடங்கி இன்று நாட்டின் அதியுயர் பதவியை அலங்கரிக்கவுள்ள பாலேந்திர ஷா, ஒட்டுமொத்த தெற்காசிய அரசியலையுமே வியப்புடன் பார்க்க வைத்துள்ளது.
