Main Menu

வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

ரஷ்யாவில் வட்ஸ்அப் மீதான தடை உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,

இந்த தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டு தற்போது முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தேசிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்ற வட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

பயங்கரவாதம் மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்க, அரசு கோரும் தகவல்களை வழங்க ‘மெட்டா’ நிறுவனம் மறுப்பு தெரிவிக்கிறது.ரஷ்ய சட்டப்படி,  ஒரு வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம் அங்கு செயல்பட வேண்டுமெனில், உள்ளூரில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தைத் திறக்க வேண்டும். வட்ஸ்அப் இதனைச் செய்யத் தவறியுள்ளது.

வட்ஸ்அப்பிற்குப் பதிலாக ரஷ்யாவிலேயே உருவாக்கப்பட்ட ‘MAX” என்ற தேசியச் செயலியைப் பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“MAX செயலி ஒரு சிறந்த தேசிய மாற்றாகும். இது குடிமக்களின் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது’ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவில் சுமார் 10 கோடி பயனர்கள் வட்ஸ்அப்பை பயன்படுத்தி வந்தனர். தற்போது நேரடி அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதால், பயனர்கள் இதனைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பலர் ‘விபிஎன்’ (VPN) சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தடை ரஷ்யாவின் ‘டிஜிட்டல் இறையாண்மையை’ பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என்று அந்நாட்டு அரசாங்கம் கருதுகிறது.