வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலத்த மழையுடனான வானிலை நிலவுகிறது.
எனினும் மக்கள் இன்று காலை முதல் அனுஸ்டிப்புகளில் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம், உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்தவொரு தடையும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ள அதேநேரம், அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை நினைவுகூர்வதற்கு எந்தவகையிலும் அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றுக்காக நிதி சேகரித்தல், ஒன்று கூடுதல், பிரசாரம் செய்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த அமைப்பின் கொடி, இலச்சினை மற்றும் கீதம் ஆகியவற்றினை பயன்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமையவே, நாம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதன்படி, தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடி, இலச்சினை கீதம் ஆகியவற்றினை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவாகக் கூறிக் கொள்கின்றோம்.
உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் நிகழ்விற்கு இடையூறு விளைவிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை.
உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை நினைவுகூருவதும் ஒன்றல்ல எனவும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...