Main Menu

யாழ். வட்டுக் கோட்டையில் இளைஞர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்; இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

ஒரே கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக முரண்பாடு இருந்துள்ளது.

இந்தநிலையில் நேற்றிரவு குறித்த பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்திற்கு அருகில் மூன்று நண்பர்களுடன் வந்த சந்தேகநபர் உயிரிழந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேகநபரின் தாக்குதலுக்கு உள்ளாகிய இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் சந்தேகநபர் தப்பி செல்ல முற்பட்டபோது படுகாயமடைந்த இளைஞர் அவரை தடுத்த போது, சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்தே, குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்ததாக கூறப்படும் சந்தேகநபர் மருத்துவமனையில் காவல்துறையினரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.