மூன்றாவது அணி சாத்தியமில்லை – கெஹெலிய
அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் சுதந்திரக் கட்சியினர் இணைந்து மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கும் சாத்தியம் மிகவும் குறைவாக இருக்கின்றது. அவ்வாறு மூன்றாவது அணி உருவாகுவதற்கான அரசியல் சூழல் தற்போது இல்லை என்று மஹிந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய தப்புக்கள் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணியாக களமிறங்க முயற்சிக்கப்படுவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து விபரிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
மஹிந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய அரசியல் சூழலில் மூன்றாவது அரசியல் கூட்டணி உருவாவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகும். அவ்வாறு மூன்றாவது கூட்டணி உருவாகுவதற்கான சாத்தியம் இல்லை என்றே நாங்கள் கருதுகின்றோம்.
அதுமட்டுமன்றி அமைச்சர் சஜித் பிரேமதாச ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியைவிட்டு செல்லமாட்டார். அதுமட்டுமன்றி நாட்டில் தற்போது அவ்வாறு ஒரு மூன்றாவது அணி உருவாகுவதற்கான அரசியல் சூழலும் இல்லை.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி யாரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தாலும் நாங்கள் அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம். எந்தவொரு திறமையான வேட்பாளரை நிறுத்தினாலும் பரவாயில்லை.
எமக்கு அவர் சவாலானவராக இருக்கமாட்டார்.
இவர் வந்தால் நல்லது அவர் வந்தால் நல்லது என்ற விடயங்கள் எம்மிடம் இல்லை. யார் வந்தாலும் நாங்கள் எதிர்கொண்டு போட்டியிட்டு வெற்றியீட்டுவோம். எமது அணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கப்படுவார். அதற்கான பணிகள் தயாராகிவிட்டன. முன்னாள் பாதுகாப்பு செயலர் களத்தில் இறங்க தயாராகிவிட்டார்.
ஒரு புதிய தலைமைத்துவத்தில் நாங்கள் நாட்டை முன்கொண்டு செல்வோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவோம். குறிப்பாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை திருத்துவது குறித்து ஆலோசிப்போம் என்றார்.