Main Menu

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மற்றுமொரு படகு சிக்கியது

தென்கடல் பகுதியில் 290 கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டநெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு போதைப் பொருட்களை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு படகும், 05 சந்தேக நபர்களும் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘தீலிஷ 03’ எனும் இந்த நெடுநாள் மீன்பிடிப் படகின் ஊடாகவே, தென்கடலில் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளுக்கு போதைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை போதைப் பொருட்களைக் கடத்திச் சென்ற போது இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளும் சந்தேகநபர்களும் நேற்று திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அந்த 11 சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 07 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.