பொலிஸ் அழைப்பாணையை கிழித்ததாக சீமான் பணியாளர் கைது – 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட பொலிஸ் அழைப்பாணையை கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதுகாவலரை பொலிஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் சென்னை வளசரவாக்கம் பொலிஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை இரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால் வழக்கை இரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்இ 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இது தொடர்பாக அனுப்பிய பொலிஸ் அழைப்பாணையில் குறிப்பிட்டபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் நேற்று மீண்டும் அழைப்பாணையில் சம்மன் ஒட்டப்பட்டது. அதில் பிப். 28-ம் திகதி (இன்று) ஆஜராகத் தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த அழைப்பாணையை கிழித்தெறிந்தார். இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் பொலிஸார் நேற்று பிற்பகல் சீமான் வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது சீமான் வீட்டில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் அமல்ராஜ் பொலிஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
துப்பாக்கி பறிமுதல்: இதையடுத்து அமல்ராஜை பொலிஸார் கைது செய்ய முயன்றதால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஆய்வாளர் உள்ளிட்ட 3 பொலிஸார் அமல்ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று காவல் துறை ஜீப்பில் ஏற்றினர்.
இதற்கிடையில் பாதுகாவலர் அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்மனை கிழித்ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கயல்விழி முறையீடு: இந்த சம்பவம் நடந்தபோது சீமான் மனைவி கயல்விழி வீட்டிலிருந்து வெளியே வந்து காவல் ஆய்வாளரிடம் மன்னித்து விடுமாறு முறையிட்டார். கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாவலர் மற்றும் சீமான் உதவியாளர் தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் சீமான் வீட்டில் குவிந்த நாம் தமிழர் கட்சியினர் பொலிஸார் அத்துமீறி நுழைந்ததாகப் புகார் தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அமல்ராஜின் மனைவி கூறும்போது “25 ஆண்டுகளாக எனது கணவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தார். அவர் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சீமானிடம் பணிபுரிந்து வருகிறார். அவர் பொலிஸாரை தாக்கவில்லை. அவர்கள்தான் எனது கணவரை தாக்கினர். மேலும்இ பொலிஸாரிடம் துப்பாக்கியை ஒப்படைக்கவே முயன்றார். அவரை கிரிமினல் குற்றவாளி போல இழுத்துச் சென்றது நியாயமா?” என்றார்.
அரசியல் காரணங்கள்… சீமான் வழக்கறிஞர் ரூபன் செய்தியாளர்களிடம் கூறும்போது “சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் வந்ததால்தான் பாதுகாவலர் துப்பாக்கி வைத்திருந்தார். அரசியல் காரணங்களுக்காகத்தான் சீமானுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது” என்றார்.
சீமான் வழக்கறிஞர் சங்கர், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த கடிதத்தில் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது “உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. வெளியூர் நிகழ்ச்சிகளில் சீமான் பங்கேற்றதால்தான் காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை” என்றார்.
பகிரவும்...