புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல்- ரஷ்யா உருவாக்கிய புதிய தடுப்பூசி
உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தனிப்பட்ட நோயாளியின் உடலமைப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட (Personalized) முதலாவது புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்யா வெற்றிகரமாக ஒரு நோயாளிக்கு செலுத்தியுள்ளது.
ரஷ்ய சுகாதார அமைச்சினால் இன்று ( 01) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, நாட்டின் சோதனை ரீதியிலான புற்றுநோய் சிகிச்சை திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவான ஒரு மருந்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நோயாளிக்கும் உள்ள தனித்துவமான புற்றுநோய் உயிரணுக்களின் (Tumor) பண்புகளைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு இந்தத் தடுப்பூசி பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன MRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இது மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை (Immune System) தூண்டி, புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அவற்றை மிகவும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஆற்றலைக் கொண்டது என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனை (Clinical Trials) நிலையிலேயே உள்ளது. இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை முழுமையாக உறுதிப்படுத்திய பின்னரே, இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளும் மருந்து நிறுவனங்களும் இத்தகைய தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசிகளை உருவாக்கப் போட்டியிட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த அறிவிப்பு மருத்துவ உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த மருத்துவப் பரிசோதனைகளில் மேலும் பல நோயாளிகளுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
