Main Menu

புதிய இந்தியாவின் வளர்ச்சியை உலகம் பார்த்து வருகிறது- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் வறுமை மற்றும் கல்வியறிவின்மை காரணமாக இந்தியாவில் ஜனநாயக ஆட்சியின் வெற்றி குறித்து பல சர்வதேச தலைவர்கள், நிபுணர்கள் சந்தேகம் கொண்டு இருந்தனர். ஆனால் இந்தியர்களாகிய நாம் சந்தேகிப்பவர்களைத் தவறென்று நிரூபித்தோம். ஜனநாயகத்தின் உண்மையான திறனைக் கண்டறிய உலகிற்கு உதவிய பெருமை இந்தியாவுக்கு உண்டு. ஜனநாயகம் இந்த மண்ணில் வேர்களை வளர்த்தது மட்டுமல்ல, வளப்படுத்தியது. நாட்டில் பாலின ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருகின்றன, பெண்கள் தடைகளை உடைத்து வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக மாறி வருகிறது. பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருகின்றன. தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் கருணை என்பதே இன்று இந்தியாவிடம் இருக்கும் ஒரு மந்திரச் சொல். ஆண்டுதோறும் நவம்பர் 15ந் தேதி பழங்குடியினர் தினமாக கொண்டாடப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தேசிய கல்விக் கொள்கை எதிர்கால தலைமுறையை தொழில் புரட்சியின் அடுத்த கட்டத்திற்கு தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, அது நமது பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கிறது.  கொரோனா தொற்றுக்கு எதிரான எங்களின் நடவடிக்கை எல்லா இடங்களிலும் பாராட்டப்பட்டது. மனித வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மூலம் நாங்கள் தொடங்கினோம். கடந்த மாதம் வரை போடப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 200 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில், பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் சாதனை சிறப்பாக உள்ளது. உலகம் பெரும் பொருளாதார நெருக்கடி விளைவுகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் போது, ​​இந்தியா ஒன்றிணைந்து முன்னேறி வருகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் உள்ளது. புதிய இந்தியாவின் வளர்ச்சியை உலகம் கண்டுள்ளது. சொந்த வீடு என்பது ஏழைகளுக்கு இனி கனவாக இருக்காது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தால் மேலும் பலருக்கு அது நனவாகி வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதே இது போன்ற முயற்சிகளின் நோக்கமாகும். ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியை, பிரிவினைக்கால பயங்கரங்களை நினைவுகூரும் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம்; இதன் மூலம் சமூக நல்லிணக்கம், ஒற்றுமை, மக்களுக்கு அதிகாரப் பங்களிப்பு ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கிறோம். காலனியாதிக்க ஆட்சியாளர்களிடம் இருந்து நம்மை நாம் விடுவித்துக் கொண்டு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக் கொள்வது என்று தீர்மானித்த நாள் தான் நாளைய தினம். இந்த நாளை நாம் கொண்டாடும் வேளையில், ஒரு சுதந்திர இந்தியாவில் நாம் வாழ்வதைத் தங்களின் மகத்தான தியாகங்கள் மூலம் சாத்தியமாக்கிய அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் தலைவணங்குவோம். சமூக நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிப்பதே சுதந்திர தினத்தின் முக்கியமான அம்சம்.  உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...